ஹைதராபாத்: பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி நடித்துள்ள படம், ‘போலா சங்கர்’. இதில் தமன்னா, கீர்த்தி சுரேஷ் உட்பட பலர் நடித்துள்ளனர். மெஹர் ரமேஷ் இயக்கியுள்ளார். இது தமிழில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடித்து வெற்றி பெற்ற ‘வேதாளம்’ படத்தின் ரீமேக். இந்தப்படம் வரும் 11-ம் தேதி வெளியாகிறது.
இதற்கு முன் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த ‘லூசிஃபர்’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்திருந்தார். அடுத்து, மோகன்லால் நடித்த ‘புரோ டாடி’ படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரீமேக் படங்களில் தொடர்ந்து நடிப்பது ஏன் என்பதற்கு அவர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறும்போது, “போலா சங்கர் கதை எனக்குப் பிடித்திருந்தது. ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் இதன் ரீமேக்கில் நடிக்கிறேன். நல்ல கதை இருந்தால், அதை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தெலுங்கு ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்க நினைக்கிறார்கள். அதில் என்ன தவறு? ‘ஓடிடி வந்த பிறகு அனைத்து மொழி படங்களையும் ரசிகர்கள் பார்க்கிறார்கள். பிறகு ஏன் ரீமேக்?’ என்றும் கேட்கிறார்கள். ‘வேதாளம்’ எந்த ஓடிடி தளத்திலும் இல்லையே. அதுதான் எங்களுக்கு நம்பிக்கை அளித்தது’ என்றார்.