சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வரும் ‘லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
தனுஷ் நடித்த ‘3', கவுதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ படங்களுக்குப் பிறகு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம், ‘லால் சலாம்'. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் ‘மொய்தீன் பாய்’ எனும் பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பை, சென்னை, புதுச்சேரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. சமீபத்தில் இப்படத்தில் ரஜினி தொடர்பான காட்சிகளுக்கான் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
இந்த நிலையில், ’லால் சலாம்’ படத்தில் விஷ்ணு விஷால் தொடர்பான காட்சிகளுக்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள விஷ்ணு விஷால், “’லால் சலாம்’ படத்தில் எனக்கான காட்சிகள் நிறைவடைந்தன. என்ன ஒரு பயணம்? உணர்வுப்பூர்வமாகவும் நிறைவாகவும் இருந்தது. நிறைய கற்றுக் கொண்டேன். இந்த மறக்க முடியாத பயணத்தை தந்த இயக்குநர் ஐஸ்வர்யாவுக்கும் லைகா நிறுவனத்துக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.