ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் பார்க்க விடுமுறை அறிவித்த தனியார் நிறுவனம்

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை பார்க்கும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அளித்திருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், பைரஸியை தடுக்கும் வகையில் பணியாளர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று குறிப்பிட்டதோடு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE