“அரவிந்த் பாடிபில்டர் அல்ல; வதந்தி பரப்பாதீர்” - கணவர் மறைவு குறித்து ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: தனது கணவரின் இறப்பு குறித்து தேவைற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் என்று சின்னத்திரை நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா உருக்கமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ‘நாதஸ்வரம்’ சீரியலின் மூலம் பிரபலமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த ஆண்டு இவருக்கும் அரவிந்த் சேகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து இன்ஸ்டாகிராம் தன் கணவருடன் ரீல்ஸ், புகைப்படங்கள், வீடியோக்களை ஸ்ருதி பதிவேற்றுவது வழக்கம். இந்தச் சூழலில் நேற்று (ஆக.3) அரவிந்த் சேகர் திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அரவிந்த் சேகர் எப்போதும் உடல் ஃபிட்னஸ்-ல் ஆர்வம் கொண்டவர். பார்ப்பதற்கு பாடி பில்டர் போன்று உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர். இதனை வைத்து அவரது மரணத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் பல்வேறு காரணங்களை சொல்லி வந்தனர்.

இந்த நிலையில், இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஸ்ருதி சண்முகப்பிரியா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அரவிந்தின் இறப்பு குறித்து பலரும் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் இரங்கல் தெரிவித்தீர்கள். அவர் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார். இந்த துயரமான நேரத்திலும் கூட இப்படி ஒரு வீடியோவை வெளியிடுவதற்கான காரணம், சமூக வலைதளங்களில், யூடியூப் சேனல்களிலும் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் தேவையற்ற தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு தேவைப்பட்டால் இப்போது நான் பேசுவதையே எடுத்துப் போட்டுக் கொள்ளலாம். தெரியாத தகவல்களை பேசி என் குடும்ப உறுப்பினர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அவர் இறந்தது மாரடைப்பால்தான். ஆனால் ‘அவர் ஒரு பாடி பில்டர்’, ‘ஜிம் பயிற்சியாளர்’, ‘ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்துகொண்டிருந்த போது இறந்துவிட்டார்’ என எதுவும் கிடையாது. அவர் ஒரு சிவில் இன்ஜினியர். உடல் ஃபிட்னஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் அவ்வளவுதான். அவருடைய மரணத்திலிருந்து நாங்கள் மீண்டு கொண்டிருக்கிறோம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்ப வேண்டாம். அதை மட்டும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் அனைவரும் வயதானவர்கள். அதை புரிந்து நடந்துகொள்ளுங்கள்” என்று ஸ்ருதி சண்முகப்பிரியா அதில் பேசியுள்ளார்.

Loading...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE