எழுத்தாளர் அஜயன்பாலா இயக்கும் படத்தின் பணிகள் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: எழுத்தாளர் அஜயன் பாலா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் இயங்கி வரும் அஜயன் பாலா, ‘சித்திரம் பேசுதடி’, ‘பள்ளிக்கூடம்’, ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘மனிதன்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘லக்ஷ்மி’, ‘தலைவி’, உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய பங்காற்றி உள்ளார்.

இந்நிலையில், அவர் இயக்குநராக அறிமுகமாகும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கின. ‘கன்னிமாடம்’ படம் மூலம் கவனம் பெற்ற ஸ்ரீராம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' புகழ் கிரிஷா குருப் நாயகியாக நடிக்கிறார். யோகி பாபு மற்றும் முனீஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மலைப் பிரதேசத்தை பின்னணியாக கொண்ட அழகான காதல் கதையான இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அஜயன் பாலா, “மனதைத் தொடும் காதல் கதை ஒன்றை மலைப்பகுதியின் பின்னணியில் மக்களுக்கு சொல்ல உள்ளோம். கதையை மட்டுமே நம்பி என்னுடன் இணைந்துள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களுக்கும் இப்படத்தை தயாரிக்கும் மருத்துவர் அர்ஜுனுக்கு நன்றி. திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE