மும்பை: நடிகை கங்கனா ரனாவத் தமிழில், இப்போது 'சந்திரமுகி 2' படத்தில் நடித்துள்ளார். இந்தியில் 'எமர்ஜென்சி' படத்தை இயக்கி, நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் கங்கனா, இரண்டு இந்தி நடிகர்கள் மீது, போலி ஐடி மூலம் தன்னைப் பின் தொடர்வதாகவும் ஒருவர் தன்னை டேட்டிங் செய்யுமாறு கெஞ்சினார் என்றும் புகார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு இவர், மும்பையை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டுப் பேசினார். இதனால் அவருக்கும், சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்தும் சமூக வலைதளத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்தப் பாதுகாப்பு குறித்து மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி, அண்மையில் கேள்வி எழுப்பினார். இந்தி நடிகர்களைக் கண்காணிப்பது சிறப்புப் பாதுகாப்பு குழுவின் பணியல்ல, அப்படியிருந்தும் இந்தப் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது என்று கூறியிருந்தார்.
இதற்குப் பதிலளித்துள்ள கங்கனா, “நான் பாலிவுட் நட்சத்திரம் மட்டுமல்ல. அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அக்கறையுள்ள குடிமகள். மகாராஷ்டிராவில் அரசியல் வன்மத்துக்கு நான் இலக்கானேன். நான் ‘துக்டே’ கும்பலைப் பற்றியும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளையும் கடுமையாகக் கண்டித்துள்ளேன். நான் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர். எனது அடுத்த படமான ‘எமர்ஜென்சி’யில் ஆபரேஷன் புளூஸ்டார் பற்றி பேசுகிறேன். இதனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, அதனால் பாதுகாப்பு கோரினேன். இதில் தவறு இருக்கிறதா சார்?" என்று கேட்டுள்ளார்.