சென்னை: ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் சீரிஸ் மற்றும் திரைபடங்களை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய பங்கு வகிக்கும் நெட்பிஃளிக்ஸ், அமேசான் பிரைம், டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், சோனி லைவ், ஜியோ சினிமா போன்ற சந்தா அடிப்படையிலான ஓடிடி தளங்களில் ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகின்றன.
திரையரங்குகளில் திரையிடப்படும் படங்களை கண்காணிக்க மற்றும் கட்டுபடுத்த மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர் உள்ளிட்டவை தணிக்கை செய்யப்படுவது இல்லை. பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களிலும் அநாகரிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். மேலும், எந்த முறையான ஆய்வும், தணிக்கையும் இல்லாததால், சந்தா செலுத்தும் நபர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள், வங்கி விவரங்களை இழக்க நேரிடலாம்.
ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதால், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுகிறது. ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள், தொடர்களை தணிக்கை செய்யக் கோரி கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு மனு அளித்தேன். அந்த மனுவின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
» 200-வது நாளை எட்டி ‘மாஸ்’ காட்டும் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவியின் படங்கள்
» 'மணிப்பூர் குறித்து நாடாளுமன்றத்தில் நாங்கள் விவாதிக்கத் தயார். ஆனால்...'' - காங். வைக்கும் ‘செக்’
இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளன எனக் கூறாமல், கோரிக்கைகள் பொதுப்படையாக உள்ளன. இது தொடர்பாக மனுதாரர் ஏற்கனவே அளித்த மனு பரீசீலிக்கபட்டுள்ள நிலையில், ஏதேனும் குறைகள் இருந்தால், சம்பந்தபட்ட சட்ட அமைப்பிடம் புகார் செய்து நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.