7 சொகுசு கார்கள், 25 அறை கொண்ட பங்களா - பாலிவுட் மறந்த பகவான் தாதா

By செய்திப்பிரிவு

அள்ளிக் கொடுக்கும் சினிமா, அதை மொத்தமாகப் பறிக்கவும் செய்யும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. அதில் ஓர் உதாரணம், பகவான் தாதா. 1940-50 களில், இந்தித் திரைப்பட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என வலம் வந்த பகவான் தாதா, மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் 1913-ல் பிறந்தவர்.

மவுனபடக் காலத்தில் நடிக்கத் தொடங்கிய அவர், தொடர்ந்து சில படங்களை இயக்கியும் தயாரித்தும் இருக்கிறார். அதில் தமிழ்ப் படமும் ஒன்று. அது, எம்.கே.ராதா, தவமணி தேவி நடித்த ‘வனமோஹினி’. இந்தப் படம் பெரும் வெற்றிபெற்றது அப்போது.

இவர் இயக்கி நடித்த ‘அல்பெலா’ என்ற இந்திப் படமும் இதன் பாடல்களும் இப்போதும் பிரபலம். இவருடைய நடன அசைவுகளைத்தான் அமிதாப்பச்சன், கோவிந்தா, மிதுன் சக்கரவர்த்தி பின்பற்றுவதாகச் சொல்வார்கள். இந்தியாவின் முதல் ஆக்‌ஷன் ஸ்டார் என்று கூறப்படும் இவர், தான் பிசியாக இருந்த காலகட்டத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார்.

வாரத்தின் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கார் என 7 சொகுசு கார்கள், மும்பையின் ஆடம்பரப் பகுதியான ஜுஹுவில் 25 அறைகள் கொண்ட பங்களா என சுக வாழ்க்கை. ஆனால் கிஷோர் குமார் நடிப்பில் இவர் தயாரித்த ‘ஹென்சே ரெஹ்னா’ படம் பாதியில் நின்றதில் சொத்துகள் அனைத்தையும் இழந்து வறுமைக்குச் சென்ற பகவான் தாதா, சின்ன சின்ன வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பங்களாவில் வசித்தவர், பிறகு தாதரில் சாதாரண வீட்டில் வறுமையோடு வாழ்ந்தார். 2002ம்ஆண்டு தனது 88வது வயதில், உயிரிழந்தார். இந்தித் திரையுலகம் மொத்தமாக மறந்துவிட்ட இந்த தாதாவுக்கு இன்று (ஆக.1) பிறந்த நாள்.

ஒருபுறம் அதிர்ஷ்டத்தையும் மறுபுறம் கசப்பையும் தந்த சினிமாவின் விசித்திர நினைவாக பகவான் தாதாவின் வாழ்வு இருப்பதாகச் சொல்கிறார்கள், பாலிவுட்டில்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE