“முக்கியத்துவம் இல்லாத படங்களில் இனி நடிக்க மாட்டேன்” - மாளவிகா மோகனன் உறுதி

By செய்திப்பிரிவு

சென்னை: இனி தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்

தமிழில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். ரஜினி நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமானவர், தொடர்ந்து விஜய்யுடன் ‘மாஸ்டர்’, தனுஷுடன் ‘மாறன்’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் தனியார் மாளவிகா மோகனன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இனி தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “நான் சினிமா துறையில் நுழைந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இனிமேல் என்னுடைய கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளேன். அது ரூ.500 கோடி வசூலிக்கும் பெரிய பட்ஜெட் படமாக இருந்தாலும் என்னுடைய கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லையென்றால் அதில் நடிக்கப் போவதில்லை. அந்தப் படம் பிரம்மாண்டமாக ஓடி வசூலை குவித்தாலும் என்னுடைய கதாபாத்திரத்தை யாரும் நினைவில் வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

நான் சிறுவயது முதல் ரசித்து வளர்ந்த ஊர்வசி, ஷோபனா, கஜோல் உள்ளிட்ட நடிகைகள் அனைவரும் ரசிகர்கள் மனதில் நிற்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்தனர். அவர்கள் வழியிலேயே நானும் செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்” என்று மாளவிகா மோகனன் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE