திரை விமர்சனம்: எல்ஜிஎம்

By செய்திப்பிரிவு

ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்க்கும் கவுதமும் (ஹரிஷ் கல்யாண்), மீராவும் (இவானா) காதலிக்கிறார்கள். திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததும் இரு குடும்பங்களும் சந்திக்கிறார்கள். வருங்கால மாமியாரான கவுதமின் அம்மா லீலாவுடன் (நதியா) பழகிப் பார்க்காமல் திருமணத்துக்குச் சம்மதிக்க முடியாது என்கிறார் மீரா. இருவரின் குடும்பத்தாரும் சுற்றுலா செல்வதன் மூலம் லீலாவுடன் பழக முடியும் என்றும் அதனடிப்படையில் திருமணம் பற்றி முடிவெடுக்கலாம் என்னும் யோசனையை முன்வைக்கிறார் மீரா. ஒப்புக்கொள்ளும் கவுதம், அலுவலகச் சுற்றுலா என்று பொய் சொல்லி லீலாவை அழைத்துவருகிறார். தொடக்கத்தில் மீராவிடமிருந்து விலகியே இருக்கும் லீலா ஒரு கட்டத்துக்குப் பின் மகனுக்காக மனமிரங்குகிறார். இந்த ட்ரிப்பில், தன் வருங்கால மாமியார் நதியாவை, இவானா புரிந்து கொண்டாரா? இவர்கள் திருமணம் என்ன ஆனது? என்பதே மீதி கதை.

வருங்காலக் கணவனின் அம்மாவுடன் பழகிப் பார்த்துவிட்டுத் திருமணம் குறித்து முடிவெடுக்க நினைக்கும் பெண்ணின் பயணம் என்னும் மாறுபட்ட கதைக்களத்தின் மூலம் கவர்கிறார் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி. ஆனால் இதை முழுமையாக ரசிப்பதற்குத் தேவையான அளவு திரைக்கதையில் புதுமையையோ சுவாரசியத்தையோ கொண்டுவரத் தவறிவிட்டார்.

படத்தின் முதல் பாதியில் நிகழும் எதற்கும் வலுவான காரணம் இல்லை. ஆனால் நாயகனின் நண்பர்களுடன் நிகழும் உரையாடல்கள், நாயகனின் அம்மாவுக்கும் அவனுக்கும் நிகழும் உரையாடல்கள் ஆகியவற்றில் வெளிப்படும் நகைச்சுவை, இரண்டு குடும்பத்தாரும் நண்பர்களும் இணைந்து செல்லும் சுற்றுலாவுக்கான பேருந்து பயணத்தில் நிகழும் களேபரங்கள் ஆகியவற்றின் உதவியுடன் முதல்பாதி ஓரளவு கலகலப்பாகக் கடந்துவிடுகிறது.

காதலியிடம் மனமின்றி வாக்குறுதி அளித்துவிட்டு அம்மாவிடமும் உண்மையை மறைத்து சுற்றுலா அழைத்துவந்த நாயகன் இருவரிடமும் ஏதோ அவர்கள் தவறு செய்ததுபோல் கோபப்படும் காட்சியில் பார்வையாளர்களுக்கு நாயகன் மீதுதான் கோபம் வருகிறது.

இரண்டாம் பாதியில் நாயகனின் அம்மாவும் காதலியும் தனியாகப் பயணத்தைத் தொடங்கும்போது இரண்டு பெண்களுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான பரிமாற்றங்கள் நிறைந்த காட்சிகளை அமைப்பதற்கான வாய்ப்பை இயக்குநர் தவறவிட்டுவிட்டார். மாறாகக் கோவாவுக்குச் சென்று ஷாப்பிங் செய்வது, செல்ஃபி எடுப்பது, பார்ட்டிக்கு செல்வது, போதை மருந்து சாமியார் மடத்தில் சிக்கிக்கொள்வது, காட்டில் புலியைக் கடத்திச் செல்பவர்களின் வாகனத்தில் புலியுடன் சிக்கிக்கொள்வது என எந்த இலக்கும் இன்றி திரைக்கதைத் தறிகெட்டு ஓடுகிறது.

இதை உணர்த்தும் குறியீடாகவோ என்னவோ படத்தில் மையக் கதாபாத்திரங்கள் ஒரு குதிரை வண்டியில் பயணிப்பதுபோலவும் அப்போது குதிரைகள் தறிகெட்டு ஓடுவதுபோலவும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. படத்தில் நடக்கும் எதற்கும் வலுவான காரணம் இல்லை. எந்த ஒரு காட்சியிலும் உணர்வுபூர்வமாக ஒட்ட முடியவில்லை, ஒட்டுமொத்தமாகப் படத்தில் சில சிரிப்புகளைத் தவிர வேறொன்றும் இல்லை.

ஹரிஷ் கல்யாண் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தந்திருக்கிறார். இவானா, நதியா இருவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பேருந்து ஓட்டுநராக யோகிபாபு, நாயகனின் நண்பனாக வரும் ஆர்ஜே விஜய் இருவரும் சிரிக்க வைக்கிறார்கள். இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை சில இடங்களில் கவனம் ஈர்க்கிறது. விஸ்வஜித் ஒடுக்கத்தில்லின் வண்ணமயமான ஒளிப்பதிவு ஒரு ஃபீல்-குட் கதைக்குத் தேவையான பளபளப்பைக் கொடுத்திருக்கிறது.

தமிழர்களின் மனதுக்கு நெருக்கமான கிரிக்கெட் நட்சத்திரம் எம்.எஸ்.தோனி இந்தப் படத்தின் மூலம் சினிமா தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். முதல் படம் தமிழ்ப்படமாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு அவரைப் பாராட்டலாம். அதே நேரம் அவர் ஒரு நல்ல திரைக்கதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று வருந்தாமல் இருக்க முடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE