நடிகை ஷோபனா வீட்டில் பணத்தை திருடிய பணிப்பெண்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடுபோன வழக்கில், வீட்டுப் பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடிகை ஷோபனா சென்னையில் ஆழ்வார்பேட்டையில் வசித்துவருகிறார். தனது தாயாருடன் வசித்துவரும் நிலையில் வயதான அவரை பார்த்துக்கொள்ள, பணிப்பெண் ஒருவரை நியமித்துள்ளார். இதனிடையே, தனது வீட்டில் பணம் காணாமல் போவதாக சில நாட்கள் முன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தாயை கவனித்து வந்த பணிப்பெண் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. பணிப்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.40 ஆயிரம் வரை ஷோபனா வீட்டில் திருடியிருப்பதை ஒப்புக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. மேலும் திருடிய பணத்தை ஷோபனாவின் கார் டிரைவர் உதவியுடன் தனது மகளுக்கு அந்தப் பணிப்பெண் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

பணிப்பெண் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என நடிகை ஷோபனா காவல்துறையிடம் தெரிவித்துள்ளார். வழக்கு ஏதும் பதிய வேண்டாம் என கூறிய ஷோபனா பணிப்பெண் மீண்டும் வீட்டிலேயே தங்கி தொடர்ந்து வேலை செய்யட்டும் என்றும் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்வதாகவும் கூறியிருப்பதாக தகவல் பரவி வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE