‘பணியாத ஆளு பாரு... இவன் ரூட்டே வேறு...’ - ரஜினியின் ‘ஜெயிலர்’ பட ‘ஜுஜுபி’ சிங்கிள் பாடல் எப்படி?

By செய்திப்பிரிவு

சென்னை: ரஜினி நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான ‘ஜுஜுபி’ (Jujubee) பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற ‘காவாலா’ மற்றும் 'Hukum’ ஆகிய பாடல்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான, ‘ஜுஜுபி’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பாடல் எப்படி? - சூப்பர் சுப்பு எழுதியிருக்கும் இப்பாடலை தீ (Dhee), அனிருத், அனந்த கிருஷ்ணன் இணைந்து பாடியுள்ளனர். சீண்டலுக்குப் பின்னான பழிவாங்கல் பாடலாக இப்பாடல் உருவாகியிருப்பதை வரிகள் உணர்த்துகின்றன. ‘கரன்ட்டுல கைய வைச்சுப்புட்ட... அது தொட்டா உடனே தூக்காம தான் விடுமா உன்னைய’, ‘புலிக்கே பசிய தூண்டிபுட்ட ரத்த காவு வாங்காம விடுமா உன்னையே’ போன்ற வரிகள் அதனை உறுதி செய்கின்றன. மேலும், ‘பணியாத ஆளு பாரு..’, ‘புரிஞ்சிடாத பாத நூறு.. இவன் ரூட்டே வேறு’ போன்ற வரிகள் ரஜினியின் ‘மாஸை கூட்டுகின்றன. பாடலின் ஸ்பீட் பீட் கவனம் பெறுகிறது. பாடல் வீடியோ:

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE