‘சுப்ரமணியபுரம்’ கேரக்டர்களில் ரஜினி, கமல் தாக்கம்: சசிகுமார் சுவாரஸ்ய பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஜெய் மற்றும் தன்னுடைய கதாபாத்திரங்களை 80-களின் ரஜினி மற்றும் கமலை வைத்தே உருவாக்கியதாக சசிகுமார் தெரிவித்துள்ளார்.

2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வெளியான படம் 'சுப்ரமணியபுரம்'. சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்திருந்த இப்படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, ஸ்வாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் சசிகுமாருடன் நடித்திருந்தனர். ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'சுப்ரமணியபுரம்' மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவின் கிளாசிக் படங்களில் ஒன்றாக இன்று வரை இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

‘சுப்ரமணியபுரம்’ வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சசிகுமார் அளித்த பேட்டி ஒன்றில், இப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் பேசும்போது, இப்படத்தின் அழகர் (ஜெய்) மற்றும் பரமன் (சசிகுமார்) கதாபாத்திரங்களை 80களின் ரஜினி மற்றும் கமல் இருவரையும் வைத்தே எழுதியதாக சசிகுமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

“ஜெய்யின் அழகர் கதபாத்திரம், 80களின் தொடக்கத்தில் கமல் அணிந்திருந்ததைப் போன்ற வண்ணமயமான சட்டைகளை அணிந்திருப்பார். கமல் அப்போது வைத்திருந்ததைப் போலவே ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார். என்னுடைய பரமன் கதாபாத்திரம் ரஜினி போல கட்டம் போட்ட சட்டைகளையே அணிந்திருக்கும். என்னுடைய ஹேர்ஸ்டைல் கூட ரஜினி போன்ற ஸ்டெப் கட் செய்யப்பட்டிருக்கும். ரஜினி - கமல் அந்தக் கதையில் நடிக்கவில்லை என்றாலும் கூட, அந்தப் படத்தில் 80களில் இருந்த ரஜினி - கமல் இருவரையும் மனதில் வைத்தே அந்த இரண்டு கதாபாத்திரங்களையும் எழுதினேன்” என்று சசிகுமார் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE