சூர்யா பிறந்தநாளுக்கு ஆந்திராவில் பேனர் கட்டிய 2 மாணவர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர், நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்காக பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா இன்று தனது 48வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூர்யா ரசிகர்கள் போஸ்டர்கள், பேனர்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தின் நரசராவ்பேட்டை பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இருவர் சூர்யா பிறந்தநாளுக்காக நேற்று நள்ளிரவில் பேனர் கட்ட முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். நக்கா வெங்கடேஷ் மற்றும் போளூர் சாய் என்ற அந்த இரண்டு மாணவர்களும் பேனர் கட்டிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த மின்கம்பிகள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார் இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE