கன்னடப் படத்துக்கு தடை கோரி ரம்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

நிதின் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் பிரஜ்வால், ராகேஷ் ராஜ்குமார் உட்பட பலர் நடித்துள்ள கன்னடப் படம், ‘ஹாஸ்டல் ஹுடுகரு பேகாகித்தாரே’). இதில் ரிஷப் ஷெட்டி, ரம்யா உட்பட சிலர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். ரம்யாவின் காட்சிகளை அவர் அனுமதியின்றி படத்தின் புரமோஷனுக்குப் பயன்படுத்தியுள்ளனர். இதற்கு ரம்யா எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடுத்தார். அனுமதி இன்றி தனது காட்சிகள் விளம்பரங்களில் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அதனால் படத்துக்குத் தடை விதிக்குமாறும் தனது காட்சிகளுடன் வெளியிடுவதாக இருந்தால் ரூ.1 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடுமாறும் கூறி இருந்தார்.

இதையடுத்து படத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. திட்டமிட்டப்படி வெள்ளிக்கிழமை படத்தை வெளியிட அனுமதிக்குமாறும், ரம்யாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறும் படத் தயாரிப்பாளர்கள் கேட்டனர். விசாரித்த நீதிபதி, ரூ.50 லட்சம் பிணைத் தொகையாக செலுத்திவிட்டுப் படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று உத்தரவிட்டார். பின்னர், ரம்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. படம் திட்டமிட்டபடி நேற்று வெளியானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE