“விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்க ஆசை; சீக்கிரம் அது நடக்கும்” - சிவகார்த்திகேயன் பகிர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: “எனக்கு விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு. சீக்கிரம் அதுவும் நடக்கும். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் போட்டி என்பதே கிடையாது” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான ‘மாவீரன்’ படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், “இந்தப் படத்துக்கு வெற்றிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நான் நிறைய வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல். ஏனெனில், என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் வந்திருக்கிறது.

நான் மிமிக்ரி செய்து டிவியில் வந்தவன். காமெடி மட்டுமே நம்பி சினிமாவுக்கு வந்தவன். படிப்படியாக நடிப்பில் இந்தக் கட்டத்துக்கு வந்துள்ளேன். என்டர்டெயினராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அது மட்டுமே இருந்தால் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு குறைந்து விடும். நல்ல நடிப்பை வாங்க இயக்குநர்களும் மனது வைக்க வேண்டும். எனக்கு அப்படிதான் மடோன் அஸ்வின் கிடைத்துள்ளார்.

என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜிலிருந்து அனைத்து இயக்குநர்களும் என்னிடம் இருந்து ஏதாவது ஒரு பெஸ்ட்டைக் கொண்டு வந்துள்ளனர். ஒரு பர்ஃபார்மிங் என்டர்டெயினராக இருக்க வேண்டும் என இந்தப் படம் உணர்த்தியுள்ளது. மடோன் விருப்பப்பட்டால் மீண்டும் இணைந்து அவருடன் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன். அவருடைய திறமையை நம்பி மட்டுமே இந்தப் படத்தை எடுத்தோம். ஒருவேளை படம் தோல்வியைத் தழுவி இருந்தால் எனக்கு இந்தப் படத்தில் சம்பளம் வந்திருக்காது. அவ்வளவுதான். மற்றபடி எனது முயற்சிகள் தொடர்ந்து கொண்டேதான் இருந்திருக்கும்.

அரசியல் கதையை அழகாக அஸ்வின் எடுத்துச் சென்றுள்ளார். படம் வெளியான முதல் நாள் மாலை நான் காஷ்மீர் சென்றுவிட்டேன். அதிதிக்கு படத்தில் குறைந்த நேரம்தான் என்றாலும் அப்படி எல்லாம் யோசிக்காமல் புரோமோஷன் வரை சின்சியராக செய்து கொடுத்தார். வெற்றி - தோல்வி என்பது வாழ்க்கையில் வந்து கொண்டுதான் இருக்கும். அதில் நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம். முதலில் இந்தப் படத்தில் வாய்ஸ் கொடுக்க விஜய் சேதுபதிதான் இயக்குநர் சாய்ஸாக இருந்தது. எனக்கு விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடிக்க ஆசை உண்டு. சீக்கிரம் அதுவும் நடக்கும். எனக்கும் விஜய் சேதுபதிக்கும் போட்டி என்பதே கிடையாது. அவர் நடிப்பை அப்படி ரசிப்பேன்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE