இந்தி நடிகை மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பிரபலமானார். இவர் இப்போது தெலுங்கில் நானி, விஜய் தேவரகொண்டா படங்களில் நாயகியாக நடிக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தென்னிந்திய சினிமா பற்றி அவர் கூறியிருப்பதாவது:
தென்னிந்திய சினிமாவில் பணிபுரிவது ஒரு நடிகையாக, எனது பார்வையை விரிவுபடுத்தி இருக்கிறது. சினிமா உலகளாவியது என்பதை உணர்த்தியிருக்கிறது. ஒவ்வொரு மொழிக்கும் தனித்தன்மையான நுணுக்கங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். தென்னிந்திய படங்களில் ஒவ்வொரு கேரக்டருக்கும் கொடுக்கும் ஆழமான முக்கியத்துவம் பாராட்டுக்குரியது. படமாக்கும் விதமும் தனித்துவமாக இருக்கிறது. கதையை வித்தியாசமாகவும் உணர்வு ரீதியாகவும் சொல்கிறார்கள். படப்பிடிப்பு நேரம் அதிகமாக இருந்தாலும் ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கள் காட்டும் விவரிப்புகள் கவனம் ஈர்க்கின்றன. இது ஒரு நடிகையாக என்னை மெருகேற்ற வைக்கிறது. அந்த மொழிக்கு நீங்கள் புதியவர் என்றாலும் தங்களில் ஒருவராகவே, திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்.
இவ்வாறு மிருணாள் தாக்குர் தெரிவித்துள்ளார்.