“அந்த பாவிமக விட்டுட்டு போனதாலதான் இங்க நிற்கிறேன்” - மேடையில் கண்கலங்கிய சிவகுமார்

By செய்திப்பிரிவு

சென்னை: குடும்ப வறுமை காரணமாக தன் அம்மா அரளிவிதையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே தன் கதை முடிந்திருக்கும் என்று பேசிய நடிகர் சிவகுமார் மேடையில் கண்கலங்கி அழுதார்.

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44ம் ஆண்டு நிகழ்வு, சென்னையில் நேற்று (ஜூலை 16) நடைபெற்றது. விழாவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 12ஆம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்தி கலந்து கொண்டனர்.

இதில் நடிகர் சிவகுமார் மாணவர்கள் முன்னிலையில் பேசும்போது, “நான் பிறந்த ஊரில் அரளி மரமும், எருக்கஞ்செடியும்தான் இருக்கும். வேறு எதுவும் விளையாது. குடும்ப வறுமை காரணமாக என் அம்மா அரளிவிதையை அரைத்து எனக்கு கொடுத்திருந்தால் அன்றே கதை முடிந்திருக்கும். அந்த பாவிமக விட்டுட்டு போனதால் இன்று இங்கே நிற்கிறேன்” என்று கூறி மேடையிலேயே கண்கலங்கி அழுதார்.

தொடர்ந்து பேசிய அவர். “30 ஆண்டுகள் என் பொறுப்பில் இயங்கிய அறக்கட்டளையை, அதற்குப் பிறகு அகரம் அறக்கட்டளை நிர்வாகம் பொறுப்பேற்று சிறப்பாக கல்விப் பணி செய்து வருகிறது. நான் சிறிய அளவில் ஏழை மாணவர்களுக்கு செய்த உதவியை, என்னுடைய பிள்ளைகள் இப்போது நல்ல முறையில் செய்து வருகிறார்கள். கிராமத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்கள் படிக்க எவ்வளவு கஷ்டபடுவார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

கல்வி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை எந்தளவு உயர்த்தும் என்பதையும் நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போல ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து நன்றாகப் படிக்கிற பிள்ளைகளுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்வதில் மிகுந்த மனநிறைவு அடைகிறேன். தடைகளைத் தாண்டி பெற்ற முதல் வெற்றி இது. இன்னும் போக வேண்டிய பயணம் வெகுதூரம் உள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய வாழ்க்கையின் இரண்டாம் பாதி சிறப்பாக இருக்கவேண்டுமானால் உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE