நடிகர் குஞ்சாகோ போபன் மீது தயாரிப்பாளர் புகார்

By செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் குஞ்சாகோ போபன் நடித்துள்ள படம், ‘பத்மினி’. சென்னா ஹெக்டே இயக்கியுள்ள இந்தப் படத்தில் மடோனா செபாஸ்டியன், அபர்ணா பாலமுரளி, மாளவிகா மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர். கடந்த 14-ம் தேதி வெளியான இந்த காமெடி படம், நல்ல விமர்சனத்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுவின் கே.வர்கி, குஞ்சாகோ போபன் மீது புகார் கூறியுள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இந்தப் படத்துக்காக போபனுக்கு ரூ.2.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் புரமோஷனுக்கு வரவேண்டியது அவர் கடமை. ஆனால் இதன் புரமோஷனில் பங்கேற்க மறுத்துவிட்டார். அவர் இணை தயாரிப்பாளராக இருக்கும் எந்தப் படத்துக்கும் இப்படி நடந்ததில்லை. அனைத்துவித புரமோஷன்களிலும் பங்கேற்பார். எல்லா சேனல்களிலும் பேசுவார். மற்ற தயாரிப்பாளர்களின் படங்கள் என்றால் கண்டுகொள்ள மாட்டார். ஒரு படத்தை பிரபலப்படுத்தும் பொறுப்பு நடிகர்களுக்கும் இருக்கிறது. உங்கள் படங்களைப் பார்க்க ரசிகர்களை நீங்கள் இழுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE