Chandrayaan 3 | “நம் கொடி உயரே பறக்கட்டும்” - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து

By செய்திப்பிரிவு

மும்பை: சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாலிவுட் பிரபலங்கள் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சந்திரயான்-3 விண்கலத்தை ரூ.615 கோடியில் இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. நிலவில் தடம் பதிக்கும் சந்திரயான்-3 ஒரு நிலவு நாள் முழுவதும் அங்கு இயங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும். ஒரு நிலவு நாள் என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமம் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.சிவன் விளக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் சந்திரயான்-3 இன்று விண்ணில் ஏவப்படுவதை முன்னிட்டு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இஸ்ரோவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுனில் ஷெட்டி: உற்சாகத்தின் அளவு நிலவு வரை எட்டியுள்ளது. வரக்கூடிய மிஷனுக்காக சந்திரயான் - 3க்கு என்னுடைய மெய்நிகர் வாழ்த்துகளை அனுப்புகிறேன். இந்தியாவின் தொழில்நுட்ப வல்லமை புதிய உயரங்களை தொடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பயணம் இலகுவானதாகவும், கண்டுபிடிப்புகள் ஆச்சர்யமூட்டுபவையாகவும் அமையட்டும். பெருமைமிகு இந்தியனாக உணர்கிறேன்.

அனுபம் கேர்: இந்தியா நிலவில் தனது 3வது பயணத்துக்கு தயாராகி வருகிறது. சந்திரயான்- 3ஐ விண்ணில் செலுத்தும் நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நம் கொடி உயரமாக பறக்கட்டும். ஜெய் ஹிந்த்.

அக்‌ஷய் குமார்: உயர்வதற்கான நேரம் வந்துவிட்டது. சந்திரயான்- 3க்காக இஸ்ரோவில் இருக்கும் நமது விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக கோடிக்கணக்கான இதயங்கள் பிரார்த்திக்கின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE