பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். பாடகரான இவர், தனுஷின் ‘மாரி’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் சில படங்களில் நடித்த இவர், மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்ததாகவும் அந்தக் காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இப்போது அளித்த பேட்டி ஒன்றில் அதில் நடித்த கதாபாத்திரம் பற்றி தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “இந்தப் படத்தில் மதுராந்தகனின் (ரஹ்மான்) ஒற்றன் கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆதித்த கரிகாலனுடன் (விக்ரம்) சென்று தகவல்களைச் சேகரிக்கும் வேடம்.
5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். த்ரிஷாவுடனும் எனக்கு காட்சிகள் இருந்தன. ஆனால், அனைத்தையும் எடிட்டிங்கில் நீக்கிவிட்டார்கள். இதில் நடிக்க கிடைத்த வாய்ப்பை பாசிட்டிவாகவே பார்க்கிறேன். இந்தப் படத்தின் 2 பாகங்களையும் பார்த்தேன். எனது காட்சிகள் இல்லாதபோதும் சிறப்பாகவே இருந்தது. அதில் அவசியமான காட்சிகள் மட்டுமே இருந்தன” என்று தெரிவித்துள்ளார்.