‘ஆர்ஆர்ஆர்’ இரண்டாம் பாகத்துக்கு திட்டமிட்டுள்ளோம் - விஜயேந்திர பிரசாத் தகவல்

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: ராஜமவுலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திட்டம் இருப்பதாக அப்படத்தின் திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உட்பட பலர் நடித்து உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘ஆர்ஆர்ஆர்’. இப்படத்துக்கு எம்.எம்.கீரவாணி இசை அமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருது வென்றது.

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கு திட்டமிட்டுள்ளதாக ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் திரைக்கதை ஆசிரியரும், இயக்குநர் ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் திட்டம் ஒன்று உள்ளது. இப்படத்திலும் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பார்கள். இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும். இப்படத்தை முன்னணி ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளது. இதனை ராஜமவுலி இயக்குவார் அல்லது ராஜமவுலியின் மேற்பார்வையில் வேறு யாரேனும் இயக்கலாம். இவ்வாறு விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE