ஹைதராபாத்: பூரி ஜெகன்நாத் - ராம் பொத்தினேனி கூட்டணியில் உருவாகும் ‘டபுள் இஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 10) தொடங்கியது.
ராம் பொத்தினேனி, நிதி அகர்வால், நபா நடேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான படம் 'இஸ்மார்ட் ஷங்கர்'. பூரி ஜெகன்நாத் இயக்கி, தயாரித்த இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரூ.100 கோடி வசூலைத் தாண்டியது. 'இஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ‘டபுள் இஸ்மார்ட்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் மீண்டும் இணையும் இப்படத்தை சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூலை 10)ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. நடிகையும் தயாரிப்பாளருமான சார்மி கிளாப் போர்டு அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ராம் பொதினேனியின் முதல் காட்சியை பூரி ஜெகன்நாத் இயக்கினார்.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மகா சிவராத்திரிக்கு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.