சீரியல், சினிமா இரண்டிலும் என் பயணம் தொடர வேண்டும்: மனிஷா ஜித் ஆசை

By செய்திப்பிரிவு

சென்னை: குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மனிஷா ஜித். ‘கம்பீரம்’ படத்தில் சரத்குமார் மகளாக நடித்த இவர், குழந்தை நட்சத்திரமாகவே பல படங்களில் நடித்திருக்கிறார். ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘விந்தை’ உட்பட சில படங்களில் நாயகியாக நடித்த மனிஷா ஜித், இப்போது சின்னத்திரையில் பிசி.

“கலர்ஸ் தமிழ்ல வெளியான ‘உயிரே’ தொடர் மூலமா சின்னத்திரையில அறிமுகமானேன். அதுல, பவித்ரா என் கேரக்டர் பெயர். முதல் தொடர்ல நல்ல வரவேற்பு கிடைச்சது. எங்கயாவது வெளியில யாராவது பார்த்தா, அந்த கேரக்டரோட பெயர் சொல்லி கூப்பிட ஆரம்பிச்சாங்க. அப்பதான் சின்னத்திரையோட ரீச் புரிஞ்சுது. மெகா தொடர்கள்ல நடிச்சாலும் சினிமால நடிக்கிறதை விடல. இன்னும் 2,3 படங்கள் ரிலீஸ் ஆகற நிலையில இருக்கு. ஒரு அவார்ட் படத்துலயும் நடிச்சிருக்கேன். சீரியல், சினிமான்னு ரெண்டு பக்கமும் என் பயணம் தொடரணும்னு நினைக்கிறேன்” என்கிற மனிஷா ஜித், இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் வரும் ‘ரஞ்சிதமே’ தொடரில் நடித்து வருகிறார்.

“இதுல ரஞ்சிதாங்கற கேரக்டர்ல நடிக்கிறேன். அம்மாவுக்கு கட்டுப்பட்ட மகன், ஆண்களை நம்பாத பெண், இவங்களுக்குள்ள நடக்கிற விஷயங்கள் தான் கதை. என்னைச் சுற்றிய கதைங்கறதால நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கு. ரொம்ப சுவாரசியமா இந்தக் கதை போகும்” என்கிற மனிஷா ஜித்,சீரியலில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார்.

“ஆமா. சினிமாவுல ஒருமூணு மாசத்தோட வேலை முடிஞ்சிரும். பிறகு வீட்டுலதான் உட்கார்ந்து இருக்கணும். டி.வி தொடர் அப்படியில்லை. ஒவ்வொரு மாசமும் 10, 15 நாள் ஷூட்டிங் இருக்கும். அதனால பிசியாஇருக்கிற மனநிலை வந்திருந்து. அதோட வேலை இல்லாம வீட்டுல இருக்கிறது போரடிக்குமில் லையா? அதனால இந்தப் பயணம் மகிழ்ச்சியா இருக்கு” என்கிறார் மனிஷா ஜித்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE