வ.கௌதமன் இயக்கும் படத்தின் தலைப்பு ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா’ படத் தலைப்பு ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘கனவே கலையாதே’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வ.கௌதமன். இரண்டாவது படமாக 2010-ம் ஆண்டு வெளியான ‘மகிழ்ச்சி’ படத்தை இயக்கினார். இந்நிலையில், தற்போது வி.கே. புரடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் ஒன்றை இயக்கி படத்தின் நாயகனாகவும் நடிக்கிறார்.

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE