நடிகை பிரியாமணி, சினிமாவுக்கு வந்து 20 வருடங்கள் முடிவடைகின்றன. இவரது முதல் தெலுங்கு திரைப்படமான ‘எவரே அதகாடு’ 2003-ம் ஆண்டு வெளியானது. தொடர்ந்து தமிழில் அமீர் இயக்கிய ‘பருத்திவீரன் ’படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்குத் தேசிய விருது கிடைத்தது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் அவர் அளித்த பேட்டியில், “நான் திரையில் முத்தக் காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன். அதற்கு என்னிடம் அனுமதி இல்லை. அது நடிப்புத்தான் என்றாலும் அதை செய்யமாட்டேன். அது எனக்கு சவுகரியமான விஷயமல்ல. காரணம் வீட்டில் என் கணவருக்கு பதில் சொல்லியாக வேண்டும். அது என் பொறுப்பு என நினைக்கிறேன். இதுபோன்ற கதைகளைக் கொண்ட படங்கள் வந்தன. ஆனால், அப்படி நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.