ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்த ‘போர் தொழில்’!

By செய்திப்பிரிவு

சென்னை: சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘போர் தொழில்’ திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடித்துள்ள படம் ‘போர் தொழில்’. கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தில் நிகிலா விமல், நிழல்கள் ரவி, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சரத்பாபு நடித்த கடைசி படமாக இப்படம் வெளியாகியிருந்தது.

படத்துக்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்திருந்தார். சீரியல் கில்லர் கதையை விறுவிறுப்பு குறையாமல் திரைக்கதையாக்கியிருந்த விதமும், அசோக் செல்வன், சரத்குமாரின் நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.

இந்நிலையில், குறைந்த பட்ஜெட்டில் அதிக லாபத்தை ஈட்டிய படங்களான ‘டாடா’, ‘குட் நைட்’ பட வரிசையில் தற்போது ‘போர் தொழில்’ படமும் இணைந்துள்ளது. ரூ.10 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவானதாக சொல்லப்படும் இப்படம் உலக அளவில் ரூ.50 கோடியை வசூலித்துள்ளது. படத்தை வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் படத்தின் வெற்றி விழாவில் இதனை தெரிவித்திருந்தார். படம் வரும் ஜூலை 7-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE