திராவிட, பெரியார் கருத்துக்கள் திரைப்படங்கள் மூலம் கொண்டுவரப்பட்டது - இயக்குநர் அமீர்

By என். சன்னாசி

மதுரை: திராவிட, பெரியார் கருத்துக்கள் திரைப்படங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த இயக்குநர், நடிகருமான அமீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பான் இந்தியா படங்களால் மாற்று மொழி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. அறிவியலின் வளர்ச்சியை தடுக்கவே முடியாது. கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, அவரை சந்தித்தேன், கேபிள் டிவி பிரச்சனை சம்பந்தமாக பேசியபோது, கைவண்டியை ஒழிக்க மிதிவண்டி கொண்டுவரப்பட்டது என கூறினார்.

அதேபோல் தான் அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். ஆட்டோ ரிக்சா வரும்போது, சைக்கிள் ரிக்சா பாதிக்கும். சைக்கிள் ரிக்சா ஓட்டுபவர்கள் ஆட்டோ ஓட்ட பழகிக் கொள்ளவேண்டும். அதுபோல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். அறிவியலை நம்மால் தவிர்க்க முடியாது. திரையரங்கில் பார்த்த சினிமா இன்று உள்ளங்கைக்கு வந்துவிட்டது. முன்பெல்லாம் சினிமாவில் எடிட்டிங் செய்யும் போது, திரையை தூரமாக வைத்து வேலை செய்தனர்.

தற்போது பக்கத்தில் வைத்து வேலை செய்கின்றனர். ஏனென்றால் அவையெல்லாம் ஓடிடியிலேயே வெளியாகும் என்பதால் அப்படி வேலை செய்கின்றனர். இதை தவிர்க்கவே முடியாது. அதுபோல பான் இந்தியா படங்களும் வரும். ஒரு மைனஸ் இருந்தால் ஒரு பிளஸ் இருக்கும். தொழிலாளர் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால், ஓடிடிக்காகவே படங்கள் எடுக்கப்படுகின்றன. ஆண்டுக்கு 250 படங்கள் வேலை நடக்கிறது. சென்னையில் அனைத்து ஸ்டூடியோக்களும் பிசியாகவே உள்ளது. அந்தத் தொழில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

மாமன்னன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், திரைப்படங்கள் மூலமாக கருத்துக்களை பதிவு செய்ய முடியும். திராவிட கருத்துக்கள், பெரியாரின் கருத்துக்களாக இருந்தாலும் திரைப்படங்கள் மூலமாகத்தான் கொண்டுவரப்பட்டது. இது தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதில், மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறார் என்பதை நான் ஏற்கவில்லை. அந்த சமூகத்தினர் ஒரு 2000 ஆண்டாக அனுபவித்த வலியை திரையின் மூலமாக சொல்ல முயற்சி செய்கிறார். அந்த உரிமை அனைவருக்கும் உள்ளது. மக்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.

இக்கருத்தை சொல்லக்கூடாது என்ப தல்ல. இது, பாதிக்கப்பட்டோரின் கருத்தாக தான் நாம் எடுத்துக்கொள்ள முடியும். வடசென்னை ராஜனின் கதாபாத்திரத்தை முழு படமாக்க எனக்கு விருப்பம்தான். ஏற்கனவே அந்த காட்சிகளை என்னிடம் காட்டப்பட்டது. இயக்குநர் வெற்றிமாறனுக்கு நிறைய வேலை உள்ளதால் அவர் இன்னும் அதை ஆரம்பிக்கவில்லை என நினைக்கிறேன். நானும் அதை பார்க்க ஆர்வலாக உள்ளேன். ‘இறைவன் மிகப்பெரியவன்’ படபிடிப்பபு ராமநாதபுரம், கோவை பகுதிகளில் முடிந்துவிட்டது. இந்த ஆண்டுக்குள் படம் முடிந்துவிடும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE