“வலியுடன் போராடி மீண்டு வருவேன்” - விபத்து குறித்து நடிகர் பிருத்விராஜ்

By செய்திப்பிரிவு

கொச்சி: “வலியுடன் போராடி விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன்” என நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

ஜெயன் நம்பியார் இயக்கத்தில் ‘விலாயத் புத்தா’ என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி வருகிறது. இதில் ‘டபுள் மோகனன்’ என்ற கடத்தல்காரராக பிருத்விராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் நடைபெற்றது.

இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது நேர்ந்த விபத்தில் நடிகர் பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக நடிகர் பிருத்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “வணக்கம். ஆம் ‘விலாயத் புத்தா’ படப்பிடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகளின்போது விபத்து ஏற்பட்டது. பிரதான அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது மீண்டு வருகிறேன். இரண்டு மாதங்களுக்கு ஓய்வு மற்றும் பிசியோதெரஃபி தான். இந்த நேரத்தை என்னால் முடிந்த அளவுக்கு ஆக்கபூர்வமாக பயன்படுத்த முயற்சிப்பேன். இந்த வலியுடன் போராடி விரைவில் முழுமையாக குணமடைந்து மீண்டு வருவேன் என்று உறுதியளிக்கிறேன். அக்கறை காட்டி அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE