ரசிகர் மரணத்தில் சந்தேகம்: உரிய விசாரணைக்கு ஜூனியர் என்டிஆர் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஆந்திரா: தனது ரசிகர் ஷ்யாம் என்பவரின் மரணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என அரசுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரின் தீவிர ரசிகர் ஷ்யாம். ஜூனியர் என்டிஆர் பங்கேற்கும் அனைத்து நிகழ்விலும் தவறாமல் கலந்துகொள்வதுடன் அவரது படங்களையும் தவறாமல் பார்த்துவிடும் அளவுக்கு ரசிக மனபான்மை கொண்டவர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் சிந்தலுரு கிராமத்தில் வசிக்கும் ஷ்யாம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதனை தற்கொலையில்லை என கூறி அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

ஷ்யாமின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் ஷ்யாம் திடீரென தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை என கூறி ‘#WeWantJusticeForShyamNTR’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ரசிகரின் மரணம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “ஷ்யாம் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். எந்தச் சூழ்நிலையில் அவர் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை. அவரது மர்ம மரணம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும் பவன் கல்யாண், ஆதி சிவகுமார், நிகில் சித்தார்த்தா, இயக்குனர் மாருதி உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்தில் காவல்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE