கொச்சி: மலையாள நடிகர் பிருத்விராஜுக்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டதை அடுத்து, அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறது.
ஜெயன் நம்பியார் இயக்கத்தில் ‘விலாயத் புத்தா’ என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார். ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ‘டபுள் மோகனன்’ என்ற கடத்தல்காரராக பிருத்விராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருந்தபோது நடிகர் பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 26) அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்றும், முழுமையாக குணமடைந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘விலாயத் புத்தா’ தவிர்த்து ‘பிரபாஸ்’ நடிக்கும் ‘சலார்’, ’ஆடுஜீவிதம்’ உள்ளிட்ட படங்களிலும் பிருத்விராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.