ஒரே நாளில் மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் போஸ் வெங்கட்டின் அக்கா, அண்ணன்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் போஸ் வெங்கட்டின் அக்காவும், அண்ணனும் மாரடைப்பால் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்எம்கே பகுதியில் நேற்று (ஜூன் 23) போஸ் வெங்கட்டின் மூத்த சகோதரி வளர்மதி மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அறந்தாங்கியில் இருந்து போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதன் சென்னை வந்துள்ளார். தன் சகோதரியின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற ரங்கநாதன் துக்கம் தாளாமல் கதறி அழுதுள்ளார். அப்போது அவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே அவரும் இறந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமானவர் வெங்கட். அந்த சீரியலில் அவர் நடித்த போஸ் என்ற கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றதால் போஸ் வெங்கட் என்று அழைக்கப்படுகிறார். ‘ஈரநிலம்’, ‘சிவாஜி’, ‘கோ’, ‘கவண்’, ‘தலைநகரம்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ‘கன்னிமாடம்’ என்ற ஒரு திரைப்படத்தையும் போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். சமீபத்தில் அவர் இயக்கிய ‘மாபொசி’ என்ற படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. இவர் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE