கர்நாடகா: “வதந்திகளை நம்ப வேண்டாம்; விரைவில் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும்” என நடிகர் யஷ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் நஞ்சனகூடுவில் உள்ள ஸ்ரீகண்டேஸ்வரா கோயிலில் நடிகர் யஷ் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பார்வையாளர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை செலவழித்து படத்தைப் பார்க்க வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் பணத்துக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும். ஆக அர்ப்பணிப்புடனும், மிகுந்த அக்கறையுடனும் பணியாற்றுவது அவசியம். ஏனென்றால் உலகம் முழுவதும் இருக்கும் ரசிகர்கள் அடுத்த படத்தை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
என் மீதான அந்த பொறுப்பில் நான் மிகுந்த கவனத்துடன் இருக்கிறேன். நீண்ட நாட்களாக படத்துக்காக உழைத்து வருகிறோம். விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும். நான் முன்பே கூறியது போல, பார்வையாளர்களை மகிழ்ச்சிபடுத்துவது என்னுடைய பொறுப்பு. அதை நான் நிறைவேற்றுவேன்” என்றார்.
‘படத்தின் ஸ்கிரிப்ட் ரெடியா?’ என ஒருவர் கேட்டதற்கு, “ஆம் ரெடியாகிவிட்டது. விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்” என்றார். ‘பாலிவுட் செல்கிறீர்களா?’ என கேட்டதற்கு, “நான் எங்கும் செல்லவில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம்” எனத் தெரிவித்தார். முன்னதாக, நிலேஷ் திவாரி இயக்கும் ராமாயணக் கதையை கொண்ட படத்தில் ராவணனாக யஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது வெளிப்படையாக அதனை மறுத்துள்ளார்.