மகேஷ் பாபுவுடன் கருத்து வேறுபாடு? - ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன் நீக்கம்?

By செய்திப்பிரிவு

ஹைதராபாத்: மகேஷ் பாபுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக - ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘குண்டுர் காரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனை வைத்து ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ம் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்துக்கு தமன் இசையமைப்பதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபுவுடன் தமனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த திடீர் மாற்றத்துக்கு காரணமாகவும் சொல்லப்படுகிறது.

தமனின் சமீபத்திய ட்விட்டர் பதிவுகளும் இதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. நேற்று (ஜூன் 19) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நாளை முதல் தன்னுடைய ஸ்டுடியோவில் மோர் கடை ஒன்றை திறக்கப் போவதாகவும், வயிற்றெரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்போவதாகவும் கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனை வைத்து ‘குண்டுர் காரம்’ படத்திலிருந்து தமன் நீக்கப்பட்ட தகவல் உண்மையாக இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இதுகுறித்து படக்குழு தரப்பிலோ, தமன் தரப்பிலோ அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE