“காதல் என்ற வார்த்தை தவறாக பயன்படுத்தப்படுகிறது” - ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

“காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்மையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “என்னைப் பொறுத்தவரை ஓர் உறவின் ஒப்பந்தத்தை முறிப்பது பொய் என்று நினைக்கிறேன். நெருக்கமான உறவில் பேசமுடியாத விஷயம் என்று எதுவுமில்லை. காதலுக்கு முன்பு நண்பர்களாக இருக்கும் அந்த உறவை நான் நம்புகிறேன். ஏனென்றால், அந்த உறவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதில் மறைப்பதற்கும் பொய் சொல்வதற்கும் எந்த தயக்கமுமிருக்காது. தவறு செய்தாலும் அதை மறைக்காமல் மனம் விட்டுப் பேசலாம்.

நாம் எல்லோரும் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்புதான். ஆனால், காதலில் செய்த தவறை சொல்லாமல் மறைப்பதுதான் பிரச்சினை. காதலில் பொய் சொல்வதையும், எமோஷனலாக பேசி ஏமற்றுவதையும் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று காதல் என்ற வார்த்தையை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

சிலசமயம் நீங்கள் நேசிக்கும் ஒருவரை அவர்கள் விரும்புவதை செய்ய அனுமதிக்காமல், உங்களுக்கு பிடித்ததை அவர்கள் மீது திணித்து அதைத்தான் நீ செய்ய வேண்டுமெனக் கட்டாயப்படுத்துகிறார்கள். அவர்களை வளரவிடாமல் தடுக்கிறார்கள். உங்களை மென்மேலும் வளரச் செய்வதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்” என்று பேசியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE