மும்பை: ’ஆதிபுருஷ்’ திரைப்படம் ஹாலிவுட்டிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட கார்ட்டூனைப் போல இருப்பதாக 1987ல் ஒளிபரப்பான ‘ராமாயணம்’ தொடரில் ராமராக நடித்த அருண் கோவில் விமர்சித்துள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் கடந்த ஜூன் 16 அன்று திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்றுவரும் இப்படத்தின் கிராபிக்ஸ்கள் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 1987ஆம் ஆண்டு வெளியான ராமானந்த சாகரின் ‘ராமாயணம்’ தொடரில் ராமர் வேடம் ஏற்று நடித்த அருண் கோவில் ’ஆதிபுருஷ்’ திரைப்படம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறுகையில், "இத்தனை ஆண்டுகளாக நாம் அனைவரும் அறிந்த மற்றும் விரும்பிய ராமாயணத்தில் என்ன தவறு? சில விஷயங்களை மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒருவேளை படக்குழுவுக்கு ராமர் மற்றும் சீதை மீது சரியான நம்பிக்கை இல்லை போலும், அதனால்தான் அவர்கள் இந்த மாற்றங்களைச் செய்துள்ளனர். ராமாயணம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் என்றைக்கும் அதை எந்த வகையிலும் சிதைக்கக் கூடாது.
» “அம்பேத்கர், பெரியாருடன் அண்ணாவையும் படிக்க வேண்டும்” - விஜய் பேச்சு குறித்து வெற்றிமாறன் கருத்து
» இரண்டு நாளில் ரூ.240 கோடி! - வசூலில் முன்னேறும் ‘ஆதிபுருஷ்’
ராமாயணம் இந்திய கலாச்சாரத்தின் பாரம்பரியம், இப்போது அது பேசப்படும் விதம் மிகவும் வேதனையை தருகிறது. ராமாயணத்தின் அடிப்படை உணர்விலிருந்து விலகிச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? ராமாயணத்தை ஹாலிவுட்டிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட ஒரு கார்ட்டூனைப் போல காண்பிப்பது சரியல்ல" என்றார்.