நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘டாணாக்காரன்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. வாணிபோஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை கார்த்திக் அத்வைத் தயாரித்து இயக்கியுள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு சாகர் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லர் எப்படி?: ட்ரெய்லரின் தொடக்கத்திலேயே நாயகனுக்கு அதிகப்படியான வெளிச்சத்தில் மட்டும் தான் கண் தெரியும் என குறிப்பிடப்படுகிறது. மொத்த படத்தின் கருவாக இதை எடுத்துக்கொள்ளும்போது சுவாரஸ்யமான ஒன்லைனாக தோன்றுகிறது. அடுத்து பின்னணியில் ஒலிக்கும் வசனம் ஒன்று படத்தோடு கனெக்ட் ஆகிறது.
‘பெரிய யானைய சின்ன கயிறால கட்டியிருப்பாங்க. யானை நெனைச்சா அந்த கயிற அறுத்துட்டு போக ஒரு செகண்ட் கூட ஆகாது. ஆனா அது முயற்சியே பண்ணாது. ஏன்னா தன்னால அந்த கயிற அறுக்கவே முடியாதுங்குறத சின்ன வயசுலையே அந்த குட்டி யானை நம்பிடும்’ என்ற வசனம் கண் குறைந்த ஒளியில் கண் தெரியாத நாயகனுடன் ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பதும் கவனம் பெறுகிறது. வேல ராமமூர்த்தியின் இளமைத் தோற்றம் பொருந்திப் போகிறது. விறுவிறுப்பாக கடக்கும் ட்ரெய்லர் காட்சிகளும், சுவாரஸ்யமான ஒன்லைனும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. படம் ஜூன் 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.