“மிகச்சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்ல; அக்கறையான மனிதரும் கூட” - முதல்வர் ஸ்டாலின் குறித்து நடிகை ரோஜா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சென்னை: தனது உடல்நிலை குறித்து தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்த அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென காலில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஜாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ரோஜா முதல்வர் ஸ்டாலினுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.

தனது ட்விட்டர் பதிவில் ரோஜா கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனிதாபிமான செயலால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். என்னை தொலைபேசியில் அழைத்த அவர், என்னுடைய உடல்நிலை குறித்து விசாரித்து, உடல்நலனை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னர் தனக்கு ஏற்பட்ட இதே உடல்நலப் பிரச்சினையை தான் கடந்த வந்தது குறித்தும் என்னிடம் கூறினார். என்னுடைய உடல்நலன் குறித்த அறிவுரையின் மூலம் பிறர் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனேன். அவர் மிகச்சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்ல. அக்கறையான மனிதரும் கூட என்பதை அவர் நிரூபித்துள்ளார். மிக்க நன்றி சார்.

இவ்வாறு ரோஜா தனது பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE