விஷால் - ஹரி இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

இயக்குநர் ஹரியுடன் நடிகர் விஷால் 3-வது முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கத்தில் ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படங்களில் நடித்திருந்தார் விஷால். இதையடுத்து இந்தக் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது. இயக்குநர் ஹரியை பொறுத்தவரை கடந்த ஆண்டு அவரது இயக்கத்தில் ‘யானை’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஷால் கடைசியாக ‘லத்தி’ படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் அடுத்து இணையப்போகும் புதிய படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை.

இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் சவுத் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. விஷாலின் 34-வது படமான இது வித்தியாசமான போலீஸ் கதை என்று கூறப்படுகிறது. சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. நடிகர் விஷாலுக்கு அடுத்ததாக ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE