‘த்ரிஷ்யம் 3’ | ஸ்பாய்லர்களை தடுக்க படக்குழு எடுத்த முக்கிய முடிவு

By செய்திப்பிரிவு

கொச்சி: ‘த்ரிஷ்யம்’ மூன்றாம் பாகத்தின் ஸ்பாய்லர்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு படக்குழு ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

தொடர்ந்து 2021ஆம் ஆண்டு ‘த்ரிஷ்யம் 2’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இப்படமும் தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த இரண்டு படங்களும் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இவை ஆங்கிலம், கொரியா உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகத்துக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விரைவில் இதற்கான படப்பிடிப்பை தொடங்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ஸ்பாய்லர்கள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்கும் பொருட்டு மலையாளம், இந்தி இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதே போல இரண்டு படங்களையும் ஒரே நாளில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் அஜய் தேவ்கனும் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE