தமிழ், தெலுங்கில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி, சில மாதங்களுக்கு முன் தனது நண்பரும், தொழிலதிபரூமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ராஜஸ்தானில் பிரம்மாண்டமாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்தி சினிமாவில் தன்னிடம் பாகுபாடு காட்டியதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தென்னிந்திய படங்களில் நான் அதிகம் நடித்து வந்ததால் பாலிவுட் ஆடை வடிவமைப்பாளர்கள் எனக்கு ஆடைகள் வழங்க மறுத்தனர். விருப்பமில்லை என்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. இப்போது, என்னை நிராகரித்தவர்களே, ‘உங்கள் படம் வெளியாகிறது. டிரெய்லர் வெளியீட்டு விழா உள்ளது. ஏன் நீங்கள் எங்கள் ஆடையை அணியக்கூடாது?’ என்று கேட்கின்றனர். நான் அமைதியாக ‘சரி’ என்று சொல்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும் அல்லவா? நான் இந்திய நடிகை என்றே எப்போதும் கூறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் .