நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: 21 கோடி ரூபாய் கடனை செலுத்தாதது தொடர்பாக நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத் தயாரிப்புக்காக, அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து, 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், இந்தக் கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. கடனை ஏற்று செலுத்துவது தொடர்பாக விஷாலும், லைகா நிறுவனமும் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகை முழுவதும் திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தங்களுக்கு வழங்க வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், "வீரமே வாகை சூடும்" என்ற படத்தை தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என லைகா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மூன்று வாரங்களில் நிரந்தர வைப்பீடாக டிபாசிட் செய்ய வேண்டும் என விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து விஷால் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், அந்த தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன், உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக் கூடாது என தடை விதித்து உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த உத்தரவை விஷால் மீறியுள்ளதாகவும், தற்போது வரை 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டி விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.சவுந்தர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில், "தங்கள் நிறுவனத் தயாரிப்பில் தற்போது வரை எந்த படங்களையும் தயாரிக்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் எந்த அவமதிப்பும் இல்லை என்று தெரிவித்து, லைகாவின் நீதிமன்ற அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், விஷால் பட நிறுவனத்துக்கு எதிரான லைகா நிறுவனத்தின் பிரதான வழக்கில் ஜூன் 26ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்படும் எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE