படப்பிடிப்புக்காக 14 மணிநேரம் தண்ணீருக்குள் நின்ற ரகுல் ப்ரீத் சிங்

By செய்திப்பிரிவு

மும்பை: நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’, ‘என்.ஜி.கே’ உட்பட சில படங்களில் நடித்துள்ளார். அவர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள ‘அயலான்’ தீபாவளிக்கு ரிலீஸாக இருக்கிறது. கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், இப்போது ‘ஐ லவ் யூ’ என்ற படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் த்ரில்லர் படமான இது ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வரும் 16-ம் தேதி வெளியாகிறது.

நிகில் மகாஜன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் காட்சிக்காக, தண்ணீருக்கு அடியில் இரண்டு நிமிடங்கள் மூச்சடக்கியபடி இருக்க வேண்டும். அதற்காக நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடுமையானப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “ஸ்கூபா பயிற்சியாளர் ஜஹான் அடன்வாலா, தண்ணீருக்குள் மூச்சை அடக்குவதற்கு எனக்குப் பயிற்சியளித்தார். ஒரு மாதமாக தினமும் இதற்கானப் பயிற்சியை மேற்கொண்டேன். நீச்சல் வீரராக இருப்பதன் உடல் மற்றும் மனத் தேவைகளைப் பற்றிய ஆழமான புரிதலை, அவர் பயிற்சிக் கொடுத்தது.

இந்தக் காட்சியை படமாக்குவதும் சவாலாக இருந்தது. நான் மதியம் 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை தண்ணீருக்குள்ளேயே இருந்தேன். கடும் குளிராக இருந்தது. ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் என் மீது வெதுவெதுப்பான நீரை ஊற்றுவார்கள். தண்ணீரில் உள்ள குளோரின் காரணமாக என் கண்கள் எரிந்தன. இருந்தாலும் அந்தச் சவாலை எதிர்கொண்டு நடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE