மலையாள சினிமாவில் மைல்கல்: ரூ.200 கோடி வசூலித்து ‘2018’ புதிய சாதனை

By செய்திப்பிரிவு

டோவினோ தாமஸ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்த ‘2018’ திரைப்படம் ரூ.200 கோடியை வசூலித்து அதிகபட்ச வசூல் சாதனையை படைத்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். நோபின் பால் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 2018-ல் கேரளா சந்தித்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் படம் தமிழ், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்தப் படம் வெளியாகி இன்றுடன் 35 நாட்கள் கடந்த நிலையில், இதுவரை உலக அளவில் ரூ.200 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த வசூல் சாதனையின் மூலம் மலையாள சினிமாவில் அதிகபட்ச வசூலை குவித்த முதல் படம் என்ற பெருமையை ’2018’ பெற்றுள்ளது.

மேலும், மலையாளத்தில் முதல் ரூ.200 கோடி பாக்ஸ் ஆஃபீஸை தொடங்கியிருக்கிறது இப்படம். இதனிடையே, கடந்த ஜூன் 6-ம் தேதி இரவு இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இப்படம் சில திரையரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE