மும்பை: சில தினங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்த நடிகை இலியானா முதன்முறையாக தனது காதலரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
'கேடி' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் இலியானா. விஜய்யின் 'நண்பன்' படத்தில் நடித்த அவர், தெலுங்கில் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போது இந்தியில் நடித்து வருகிறார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ என்பவரை காதலித்து வந்தார். 2019ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் நடிகை கேத்ரினா கைஃப்பின் சகோதரர் செபாஸ்டியன் லாரன்ட் மைக்கேலை அவர் காதலிப்பதாகச் செய்திகள் வெளியாயின.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இலியானா தான் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தார். தொடர்ந்து தனது கர்ப்பகால புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வரும் அவர், தற்போது முதன்முறையாக தனது காதலரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஆனால் அதில் அவரது முகம் தெளிவாக தெரியாத வண்ணம் ப்ளர் செய்யப்பட்டுள்ளது. இதுநாள் வரை தனது காதலரின் பெயரை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறார் இலியானா.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான ஆசிர்வாதம். இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலி என்று நான் நினைக்கவில்லை, எனவே இந்தப் பயணத்தில் இருப்பதில் நான் மிகவும் பாக்கியம் செய்திருப்பதாக கருதுகிறேன். உங்களுக்குள் வளரும் ஓர் உயிரை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. அடிக்கடி நான் என்னுடைய வயிற்றை பார்த்து ஆச்சர்யமடைகிறேன். நான் உன்னை சந்திக்கிறேன் என்று சொல்கிறேன். சில நாட்கள் விவரிக்க முடியாத அளவிற்கு கடினமாக உள்ளன. எனவே முயற்சி செய்கிறேன். நான் வலிமையாக இல்லாவிட்டால் நான் எப்படி ஒரு தாயாக முடியும்.
» ‘கிளாடியேட்டர் 2’ படப்பிடிப்பில் விபத்து - காயங்களுடன் தப்பிய படக்குழு
» அனல் பறக்கும் ஆக்ஷன்.. பாலையாவின் ‘பகவந்த் கேசரி’ டீசர் எப்படி?
என்னிடம் நானே கனிவாக நடக்க மறக்கும்போது, இந்த அன்பான மனிதர்தான் எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் உடையத் தொடங்கும்போது அவர் என்னை தாங்கிப் பிடித்தார். என்னுடைய கண்ணீரை துடைக்கிறார். என்னை சிரிக்க வைக்க ஜோக்குகளை சொல்கிறார். எனக்கு அந்த தருணத்தில் என்ன தேவை என்பதை தெரிந்துகொண்டு என்னை அணைத்துக் கொள்கிறார். எல்லா விஷயங்களும் இனி கடினமானவையாக இருக்கப் போவதில்லை.
இவ்வாறு இலியானா பதிவிட்டுள்ளார்.