“ராமன் கதாபாத்திரத்தில் நடிப்பது உனக்கு கிடைத்த பாக்கியம்” என கூறி நடிகர் சிரஞ்சீவி தன்னை பாராட்டியதாக ‘ஆதிபுருஷ்’ ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் பிரபாஸ், “இதை வெறும் படமாக பார்க்கவில்லை. எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களை சந்திப்பது மகிழ்ச்சி. ரசிகர்களாகிய நீங்கள் தான் என்னுடைய பலம். வழகத்தை விட அதிகமான படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன்.
» சிவகார்த்திகேயன் இல்லாமல் காஷ்மீரில் தொடங்கிய ‘எஸ்கே 21’ படப்பிடிப்பு
» “அனுமனுக்காக ஒரு காலி இருக்கை ப்ளீஸ்...” - ‘ஆதிபுருஷ்’ இயக்குநர் கண்ணீர் மல்க கோரிக்கை
ஒவ்வொரு வருடமும் என்னுடைய இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகும். பேசுவதை குறைத்துக்கொண்டு படங்களில் அதிகம் கவனம் செலுத்தலாம் என நினைக்கின்றேன். படங்கள் வெளியாவதில் தாமதமாவது என்னுடைய கட்டுப்பாட்டில் இல்லை” என்றவர், திருமணம் குறித்து பேசுகையில், “திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடைபெறும்” என்றார். மேலும், “இந்தப் படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் குறித்து அறிந்த சிரஞ்சீவி, என்னிடம் ராமன் கதாபாத்திரத்தில் நடிப்பது உனக்கு கிடைத்த பாக்கியம் என்று பாராட்டினார்” என்று பிரபாஸ் பேசினார்.