“ஆதிபுருஷ் படத்தின் ஒவ்வொரு காட்சியின்போதும் அனுமனுக்காக ஒரு இருக்கையை காலியாக ஒதுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என ‘ஆதி புருஷ்’ படத்தின் இயக்குநர் ஓம் ராவத் கண்ணீர் மல்க, தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராமாயணக் கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஒரே நேரத்தில் 5 மொழிகளில் வரும் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியானபோது, அதன் மோசமான கிராபிக்ஸால் இணையத்தில் கடும் கிண்டலுக்கு உள்ளானது. இதன் எதிரொலியாக படத்தின் கிராபிக்ஸ் பணிகளை மேலும் ரூ.100 கோடிக்கு மேல் செலவு செய்து படக்குழு புதுப்பித்தது. இதனால், கடந்த ஜனவரி மாதம் வெளியாக வேண்டிய படம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்வு திருப்பதியில் நேற்று (ஜூன் 6) நடைபெற்றது. இதில் படத்தின் புதிய ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், “ராமயணம் எப்போதெல்லாம் அரங்கேற்றப்படுகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்க்க அனுமன் வருவார் என என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். எனவே ‘ஆதிபுருஷ்’ படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என தயாரிப்பாளரிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்.
» “சாதி ரீதியாக படம் எடுப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்”: எஸ்.வி.சேகர் பேச்சு
» தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விஜய்
உலகத்தில் எங்கெல்லாம் ‘ஆதிபுருஷ்’ படத்தின் காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறதோ அங்கெல்லாம் ராமாயணத்தைக் காண வரும் அனுமனுக்காக ஒரு சீட்டை காலியாக வைக்க வேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு நான் வேண்டுகோள் வைக்கிறேன்” என கண்ணீர் மல்க பேசினார். உடனே அருகிலிருந்த நடிகர் பிரபாஸ் அவரை ஆரத்தழுவி தேற்றினார்.
இதனிடையே, தற்போது வெளியான புதிய ட்ரெய்லரின் கிராபிக்ஸ் தரம் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றனர். | வாசிக்க > “வீடியோ கேம் போன்ற கிராபிக்ஸ்” - புதிய ட்ரெய்லரால் மீண்டும் கேலிக்கு உள்ளாகும் ‘ஆதிபுருஷ்’