சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவுள்ளார் நடிகர் விஜய்.
விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் முயற்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக விஜய் ஈடுபட்டு வருகிறார். அரசியலுக்கு வருவதாக இதுவரை வெளிப்படையாக விஜய் பொதுவெளியில் சொல்லாமல் இருந்தாலும்,
விஜய் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் விரைவில் விஜய் அரசியல் களம் காண்பார் என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கியுள்ளன. அவ்வப்போது, மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் அழைத்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்கும் விஜய், அவர்களுக்கு இயக்கத்தை விரிவுப்படுத்துவதற்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல், அடுத்து வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்பாளர்களை நிறுத்துவதற்காக, தொகுதி வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சர்வே நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
» “வீடியோ கேம் போன்ற கிராபிக்ஸ்” - புதிய ட்ரெய்லரால் மீண்டும் கேலிக்கு உள்ளாகும் ‘ஆதிபுருஷ்’
» திருமணம் குறித்து சர்ச்சைக் கருத்து - ஷாஹித் கபூரை விமர்சிக்கும் நெட்டிசன்கள்
அதன் ஒரு பகுதியாக 234 தொகுதிகளிலும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பில் முதல் 3 மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை விஜய் சந்தித்து, அவர்களுக்கு தேவையான கல்வி உதவியை செய்ய இருப்பதாக சமீபத்தில் விஜய் மக்கள் இயக்கம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது அதனை விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உறுதி செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஜூன் 17ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்சன் சென்டரில் 2023ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நடிகர் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது