கொச்சி: ஓடிடி தளங்களில் திரைப்படங்கள் விரைவாக வெளியிடப்படுவதை கண்டித்து இன்றும் நாளையும் கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஜூட் ஆந்தணி ஜோசப் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள திரைப்படம் ‘2018’. இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் மலையாளத்தில் அதிகபட்ச வசூல் சாதனை படைத்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், நேற்று (ஜூன் 6) இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதே போல ஃபஹத் ஃபாசில் நடித்த ‘பச்சுவும் அத்புத விளக்கும்’ திரைப்படமும் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது.
இந்த நிலையில், திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் விரைவிலேயே வெளியாவதைக் கண்டித்து இன்றும் (ஜூன் 7) நாளையும் (ஜூன் 8) கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக கேரள திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் கே.விஜய்குமார் கூறியதாவது: ‘2018’ மற்றும் ‘பச்சுவும் அத்புதவிளக்கும்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ஓடிடியில் இதுபோன்ற திரைப்படங்களை முன்கூட்டியே வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் திரையரங்குகளை மூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு மட்டுமே ஓடிடியில் திரைப்படங்களை வெளியிட அனுமதி வழங்குமாறு அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஓடிடி தளங்களுக்கு இணையாக திரையரங்குகளை எங்களால் இயக்க முடியாது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். திரைப்படங்களின் ஓடிடி ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டதும், திரையரங்குகளுக்கு செல்லும் மக்கள் அங்கே செல்வதில்லை. தயாரிப்பாளர் இன்னும் சில நாட்கள் காத்திருந்திருந்தால் ‘2018’ கேரளாவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் மலையாள படம் என்ற பெருமையை பெற்றிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.