பெங்களூரு: பிரபல கன்னட நடிகை ராகினி திவேதி. இவர் தமிழில் ‘நிமிர்ந்து நில்’, ‘கிக்’ படங்களில் நடித்துள்ளார். சுந்தர்.சியுடன் ‘ஒன் 2 ஒன்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த ‘ராகினி ஐபிஎஸ்’ என்ற கன்னட படம் 2014-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. கே.மஞ்சு தயாரித்திருந்தார். இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘ராகினி ஐபிஎஸ் வெர்சஸ் ஐஏஎஸ்’ என்ற பெயரில் உருவாகிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரி ரூபா முட்கிலும் ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரியும் கடுமையாக மோதிக்கொண்டனர். அந்தச் சம்பவங்களை வைத்து இந்தப் படம் உருவாக இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.